Tuesday 23 February 2010

20. பெரியார் தாடி வளர்த்த கதை

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் கூட ஈ.வெ.ராமசாமியின் புகழ் பரவியிருந்தது. சுயமரியாதையை விரும்பிய தமிழர்கள் சிலர் மலேசியாவுக்கு ஈ.வெ.ராவை பலமுறை அழைத்தார்கள். வெளிநாட்டு வாழ் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து பயணம் மேற்கொள்ளுவதென முடிவெடுத்தார் ஈ.வெ.ரா.

அதன்படி 1929ஆம் ஆண்டு, டிசம்பர் 15ஆம் தேதி ஈ.வெ.ரா, அவரது துணைவியார் நாகம்மையார், மற்றும் சாமி சிதம்பரனார், எஸ். ராமநாதன், பொன்னம்பலனார் போன்றோருடன் நாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்து கப்பலேறினார். அந்தக் கப்பல் ஐந்து நாட்கள் கழித்து இருபதாந்தேதி பினாங்கில் போய் நின்றது. மலேசியா வாழ் தமிழர்கள் லட்சக் கணக்கில் திரண்டிருந்தார்கள். கூடியிருந்த மக்களின் உற்சாகம் கண்டு ஈ.வெ.ரா திகைத்துப் போனார். பல இந்தியத் தலைவர்கள் இதற்கு முன்பு பினாங்கிற்கு வந்திருந்த போதும் எவருக்கும் கிடைக்காத வரவேற்பு ஈ.வெ.ராவிற்கு வழங்கப் பட்டது. அவருக்கு குவிந்த மாலைகளும், பொன்னாடைகளும் கணக்கிலடங்கா. மலேயப் பத்திரிக்கைகள் கூடியிருந்த கூட்டத்தினரைப் பற்றியும், ஈ.வெ.ராவைப் பற்றியும் பிரமாதமாக செய்தி வெளியிட்டன.

டிசம்பர் 23ந்தேதி ஈப்போவில் தமிழர் சீர்திருத்த மாநாட்டை ஈ.வெ.ரா துவக்கி வைத்தார். தமிழ்நாட்டுத் தமிழர் மாத்திரமன்றி யாழ்ப்பாணத் தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் என மொழி பேதமற்று மக்கள் கூடியிருந்தனர். 26ந்தேதி சிங்கப்பூர் சென்று மலேய-இந்திய சங்க மாநாட்டில் விரிவுரையாற்றினார்.

குழுமியிருந்த கூட்டத்தினரில் பலர் கல்வியறிவு குறைந்தவர்கள். எல்லோரும் கூடுகிறார்கள் என வேடிக்கை பார்க்க வந்தவர்கள். ஈ.வெ.ராவை பெரிய மகானாக நினைத்து அவர் காலில் விழுந்து ஆசி வாங்குவதற்கு பெரிய போட்டா போட்டியே நடந்தது. எந்த மனிதர்களுக்கு சுயமரியாதை வேண்டுமென கற்பிக்க விரும்பினாரோ, அந்த மனிதர்களே காலில் விழுவது கண்டு மனம் வருந்தினார். தொடர்ச்சியான சுயமரியாதை இயக்க பிரச்சாரம் மூலம் மட்டுமே இம்மக்களை அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்க முடியுமென்று முடிவு செய்தார்.

போகுமிடமெல்லாம் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சலிக்காது பதில் சொல்லியபடியே இருந்தார். பெரியாரின் நேரடியான பதிலுரைகள் சிலரை பின்னங்கால் பிடறியில் பட ஓட வைத்தது. பலரை அவர்பால் ஈர்த்தது. பினாங்கு, ஈப்போ, கோலாலம்பூர், கோலாப்பிறை, மலாக்கா, தம்பின், பத்துபகாட், கம்மார், தெலுக்கான்சன், சுங்கை பட்டாணி, சுங்கை குரூட், தஞ்சைமாலிம், கோலாக்ங்சார், தைப்பிங்க், மூவார்,கோலக்குபு ஜோகூர்பாரு உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சொற்பொழிவாற்றினார்.

மீண்டும் 1930, ஜனவரி 11ந்தேதி பினாங்கில் கப்பலேறி 16ந்தேதி நாகப்பட்டிணம் துறைமுகம் வந்திறங்கினார். இந்த இருபது நாள் பயணத்தில் ஓய்வின்றி தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஈ.வெ.ராவிற்கு சவரம் செய்யக் கூட நேரம் வாய்க்கவில்லை. பெரிய மீசையோடு கப்பலேறிய ஈ.வெ.ரா தாடியோடு வந்திறங்கினார். தற்செயலாக நேரிட்ட இந்தக் கோலத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார். சவரம் செய்ய செலவழிக்கும் நேரத்தில் தலையங்கம் எழுதவோ, தொண்டர்களிடம் பேசவோ நேரத்தை செலவிடலாமென முடிவுக்கு வந்தார். பொது வாழ்கையில் ஈடுபடுவோர் குளிக்கவோ, சவரம் செய்து கொள்ளவோ, சலவை உடுக்கவோ, தலை சீவவோ, அலங்காரம் மேற்கொள்ளவோ செலவழிக்கும் நேரத்தில் மக்களுக்கு ஏதேனும் பயன்படும் காரியங்களில் ஈடுபடலாம் என்றும் புதிய அர்த்தம் கற்பித்தார்.

ஈ.வெ.ரா நாட்டிலில்லாத சமயத்தில் சென்னைக்கு மாற்றப் பட்டிருந்த குடியரசு, ரிவோல்ட் பத்திரிக்கைகள் மீண்டும் ஈரோட்டிற்கே கொண்டு வரப்பட்டன. 1930ஆம் ஆண்டோடு ரிவோல்ட் ஆங்கில இதழுக்கு மூடுவிழா நடத்தி விட்டு குடியரசில் முன்னிலும் தீவிரமாய் ஈடுபடத் துவங்கினார். அதே வருடத்தில் இந்தியாவிலிருந்து வெள்ளையனை வெளியேற்றுவதற்கு காந்தியார் உப்பு சத்தியாகிரகம் என்னும் புதிய போராட்டத்தை துவங்கியிருந்தார். தேசம் முழுவதிலும் பெரிய அலையாய், உப்பு சத்தியாகிரகப் பிரச்சாரம் நடைபெற்று வந்தது. தென்னாட்டில் அவ்வியக்கத்தை நடத்த ராஜாஜியும், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் காந்தியாரால் தேர்ந்தெடுக்கப் பட்டனர். சாதாரண அப்பாவி மக்கள் பலரும் இப்போராட்டத்தால் அடிமைத் தளையிலிருந்து விடுதலை கிடைத்துவிடுமென நம்பினர்.

இதனை மிகக் கடுமையாக எதிர்த்து ஈ.வெ.ரா முழக்கமிட்டார். மேடையில் மாத்திரமல்லாது, குடியரசிலும் தொடர்ந்து எழுதினார். இந்தக் கொள்கையிலும், இதனை நடத்துகின்ற தலைவர்களின் நாணயத்திலும் தனக்கு நம்பிக்கையில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்தியாவில் மத ஆதிக்கம், சாதீய இழிவு, குருட்டு நம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமை, பார்ப்பான மேலாதிக்கம் இவையாவும் அடியோடு ஒழிக்கப் பட்டால்தான் பூரண சுயராஜ்ஜியம் என்பது கிடைக்கும்; கிடைத்தாலும் நீடித்து நிற்கும் என்று தமது எண்ண ஓட்டத்தை எவருக்கும் அஞ்சாது பதிவு செய்தார்.

ஈ.வெ.ராவின் இதுபோன்ற வாதத்தை கடுமையாக எதிர்த்தார்கள் காங்கிரசார். ஒரு தேசிய எழுச்சியை வேண்டுமென்றே அவமானப் படுத்துகிறார் என்று திட்டித் தீர்த்தார்கள். மேடைகளில் பகிரங்கமாக கேவலமாகப் பேசினார்கள். மொட்டைக் கடிதங்களை குடியரசிற்கு அனுப்பி, தமது கோபத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். வெள்ளைக்காரனின் பாதந்தாங்கி எனப் பட்டம் சூட்டினார்கள். காங்கிரசாரின் இது மாதிரியான தொடர் மிரட்டல்களுக்கு கொஞ்சமும் அஞ்சவில்லை வெண்தாடி வேந்தர். உயிரிருக்கும் வரை எம்மக்களின் சுயமரியாதைக்கும், சுகமான வாழ்விற்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டுதானிருப்பேன் என்றும், பேசிக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பேன் என்றும் அறிவித்தார் ஈ.வெ.ரா.

1931ஆம் ஆண்டு மே பத்து, பதினொன்று ஆகிய தேதிகளில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாட்டினை ஈரோட்டில் நடத்தினார். இதில் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி போன்றோரும் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், தாழ்த்தப் பட்டோர் எல்லோரும் ஒன்றாக கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கானோருக்கு உணவு சமைத்து பரிமாறியது, பல்லாயிரம் ஆண்டு காலமாக அடிமையாய், தீண்டத் தகாதவர்களாய், புறவாசல் வழியே வந்து செல்பவராய் இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள்தான். இந்த நிகழ்சியைக் கண்டு மாநாட்டில் கலந்து கொள்ள வடமாநிலத்திலிருந்து வந்திருந்த எம்.ஆர்.ஜெயக்கர் என்பவர் ஈ.வெ.ராவை பெரிதும் பாராட்டினார். சட்டமன்றம் செல்லவோ, அரசு பதவி பெறவோ விரும்பாமல் மக்களிடையே இது மாதிரியான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுத் தொண்டாற்றி வரும் ஈ.வெ.ராமசாமியைக் கண்டு தான் பெரிதும் வியப்பதாய் மாநாட்டு மேடையிலேயே கூறினார்.

அதே ஆண்டு, ஆகஸ்டு மாதம் மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு விருதுநகரில் நடத்தப் பட்டது. ஈரோட்டில் போடப்பட்ட தீர்மானங்கள், அத்துணையையும் ஏற்றுக் கொள்வதோடு, கதர், கைத்தொழில் திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவை அல்ல; எனவே இயந்திர சாதனங்களே தொழில் வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்தவை என்பதாக ஒரு தீர்மானம் இம்மாநாட்டில் இயற்றப் பட்டது குறிப்பிடத் தக்கது.

பொதுவுடைமை இயக்கத்தின் மூலவர்களான காரல் மார்க்ஸையும், லெனினையும் ஈ.வெ.ராமசாமி தனியாகப் படித்ததில்லை என்றபோதிலும், இருபத்தோராம் வயதில் தந்தையின் தொழிலை தான் கையிலெடுத்த போதிலிருந்தே தொழிலாளர்களுக்கு உகந்த, உற்ற தோழனாய் விளங்கி வந்திருக்கிறார். தொடர்ச்சியான தேடுதலின் பயனாய் பொதுவுடைமை சமதர்ம திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்திய சோசலிச சோவியத் ரஷ்யாவை நேரில் கண்டுவர விரும்பினார். ஆனால், அவரின் உடல்நலம் அதற்கு ஒத்துழைக்கவில்லை. ஈ.வெ.ராவின் உடல்நலத்தினை கருத்தில் கொண்டு, அவரை எந்த நிகழ்சிக்கும் அழைக்க வேண்டாமென நாகம்மையார் அறிக்கை ஒன்றினை விடுத்தார். முழுமையான ஓய்வு ஈ.வெ.ராவை பழைய நிலைக்கு திரும்ப வைக்க உதவுமென திட்டமிட்டார்.

சூரியனை சும்மா இருக்கச் சொல்ல முடியுமா? பூமி சுழல்வதால் களைப்பாய் இருக்கிறதென ஓய்வெடுக்கச் சொல்ல முடியுமா? இதெல்லாம் முடியாத போது ஈ.வெ.ராமசாமி மட்டும் எப்படி முடங்கிக் கிடப்பார்? நாகம்மையாரின் எல்லா வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் நண்பர் ராமநாதன், ஈரோட்டு ராமுவுடன் கப்பலில் வசதி குறைந்த நான்காம் வகுப்பில் புறப்பட்டார்.

(தொடரும்) *Download As PDF*

Tuesday 16 February 2010

19. சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி

காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதப்போக்கை பறைசாற்றும் வேலையை ஈ.வெ.ராமசாமி திறம்படச்செய்து வந்தார். தனது குடியரசு பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதினார். வர்ணங்களை ஆதரிப்போரையும், அதை கடைபிடிக்கும் காங்கிரஸ் கட்சியையும் விமர்சனம் செய்து கட்டுரைகளும், தலையங்கமும் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தன.

1928ம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் தென்னிந்திய ரயில்வே ஊழியர்களின் போராட்டம் வெடித்தது. நாகபட்டினம், போத்தனூர் பகுதிகளில் இருந்த ரயில்வே பணிமனைகளை இழுத்து மூடி, திருச்சி, பொன்மலையில் இருந்த ரயில்வே பணிமனையை விரிவு படுத்த திட்டமிட்டது ரயில்வே நிர்வாகம். இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் போராட்டங்களில் குதித்தானர்.

இதன் தொடக்க காலத்தில் இப்போராட்டம் தேவையற்றது என்பது போன்று எழுதினார் ஈ.வெ.ரா. சென்னையில் ஆட்சி நடத்தி வரும் நீதிகட்சிக்கு பார்ப்பனர்கள் தரும் தொல்லையாக இருக்குமோ என்று முதலில் கருதினார் ராமசாமி. அதனால் போராட்டத்தில் ஈடுபட வேண்டாமென்று அறிக்கை விடுத்தார். ஆனால் நாகபட்டினம் பணிமனையில் ஈ.வெ.ரா வின் சுயமரியாதை இயக்கத்தைச்சேர்ந்த பலர் இருந்தனர். அவர்களில் சிலர் ஈ.வெ.ராவை சந்தித்து, தங்களது போராட்டத்தின் காரணங்களை விளக்கிச்சொன்னவுடன் அதில் இருக்கும் உண்மையான சூழ்ச்சியை உணர்ந்து கொண்டார் ஈ.வெ.ராமசாமி.

உண்மைகளை உணர்ந்துகொண்ட பின் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக எழுதத்தொடங்கினார். பிரச்சாரங்களும் செய்யத்தொடங்கினார். அதே ஆண்டு ஜூலை 27ல் ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடு பட்டார்கள். அவர்களை ஆதரித்து, அரசாங்கம் விதித்த தடையை மீறி, நாகபட்டினம் சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவாக பேசினார். பொதுமக்கள் இப்போராட்டத்திற்கு நிதி உதவி அளித்து ஆதரவு தரவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் ஈ.வெ.ரா.

ஈரோட்டிலும் ரயில்வே தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்தினார். நிதி வசூலித்து போராட்டக்காரர்களுக்கு கொடுத்துதவினார். இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உண்மையில் சிக்கன நடவடிக்கையோ, போதுமான லாபம் இல்லாததால் ஏற்படுவதோ, பொது மக்களுக்கு கட்டணக் குறைப்பு போன்ற சலுகைகளைத் தருவதற்கானதோ நிச்சயம் இல்லை என்பதை தன் பிரச்சாரத்தில் விளக்கிச் சொன்னார் ராமசாமி. சிக்கனம் என்ற பெயரில் இந்தியர்களை ஆட்குறைப்புச் செய்து, வெள்ளையர்களுக்கு வேலை கொடுப்பது என்பதுதான் தென்னிந்திய ரயில்வேயின் உண்மையான நோக்கம் என்பதை பொதுமக்களுக்குப் புரிய வைத்தார்.

ஈ.வெ.ராவின் பிரச்சாரத்தை தாங்கிக் கொள்ள முடியாத அரசு அவரையும், போராட்டத்தில் முன்னணியிலிருந்த அவரது நண்பர்கள் சிலரையும் கைது செய்து வழக்குத் தொடுத்தது. ஒரு மாத காலம் சிறையிலிருந்த பின் ஜாமீனில் வெளிவந்தார் ராம்சாமி. பின்னர் விசாரணையின் போது எதிர் வழக்காடுவதில்லை என முடிவு செய்து அறிவித்தார். திடீரென அரசாங்கம் அவரது மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்ததால் அதிலிருந்து விடுதலையானார் ஈ.வெ.ராமசாமி.

அதே நேரத்தில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற முக்கியத்தலைவர்களான மா.சிங்காரவேலர், முகுந்தலால் போன்றோருக்கு பத்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது. மேல் முறையீட்டின் பேரில் பின்னர் அது இரண்டு ஆண்டுகளாக் குறைக்கப் பட்டது. பெருமாள் என்பவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.

இதன் பின் தன்னுடைய குடியரசு பத்திரிக்கையை சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு முழுமூச்சுடன் பயன் படுத்த ஆரம்பித்தார். விழிப்புணர்வூட்டும் பெட்டிச் செய்திகளை வெளியிடுவது, பார்ப்பன முறைகளை விடுத்து நடக்கும் திதி, புதுமனை புகுவிழா போன்றவற்றை பற்றிய செய்திகளை முக்கியத்துவம் தந்து வெளியிடுவது என பத்திரிக்கையின் எல்லா சாத்தியங்களையும் தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்.

இத்தகைய செய்திகளின் விளைவாக மக்களுக்கு பார்ப்பன புரோகிதர்களின் தலையீடில்லாமலே விசேஷங்களை நடத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. சுயமரியாதைக் கூட்டங்களில் மாலை மாற்றித் திருமணம் செய்து கொள்வது, தலைவர்களின் தலைமையில் திருமணம் செய்து கொள்வது என சுயமரியாதைத் திருமணம் என்கிற முறை மெல்ல மெல்ல உருவானது.

விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சொந்தப் பத்திரிக்கையின் பயன் பாட்டை உணர்ந்த ஈ.வெ.ரா, அடுத்த கட்டமாக கலகம் அல்லது கிளர்ச்சி என்று பொருள் படும் ரிவோல்ட்(Revolt) என்ற பெயரில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையொன்றையும் துவக்கினார்.

”ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரி போன்றவர்களுக்கும், மற்றும் சில சுயநலக்காரர்களும், கூலிகளும் நமது பிரச்சாரத்திற்கு விரோதமாக ஆங்கிலப் பத்திரிக்கைகள் மூலமாகவும், வியாசங்கள் மூலமாகவும் பிரச்சாரம் செய்கிறபடியாலும், நமது பிரச்சாரமும் பத்திரிக்கையும் தமிழிலேயே இருப்பதாலும், அது தமிழ்நாட்டை விட்டு வெளியே போக மார்க்கமில்லாதிருப்பதாலும் ஆங்கிலத்தில் ஒரு பத்திரிக்கையை குடி அரசுக் கொள்கையை ஆதாரமாகக் கொண்டு ஆரம்பிக்க வேண்டுமென்பதற்காக ஒரு யோசனை தோன்றியிருக்கிறது. அப்பத்திரிக்கைக்கு ரிவோல்ட் என்பதாக பேர் கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம். ” என்று ப்பத்திரிக்கை தோன்றியதின் காரணங்களை ஈ.வெ.ரா. விளக்கமாக எழுதினார்.

சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17, 18 தேதிகளில் செங்கல்பட்டில் நடத்தப் பட்டது. டபிள்யூ.பி.ஏ. சௌந்தரபாண்டியன் தலைமையில் பி.டி ராஜன் கொடியேற்றித் துவக்கி வைத்த அந்த மாநாட்டில் பின்வரும் கருத்துக்களைக் கொண்ட 34 தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

  1. இந்தியாவுக்கு வரும் சைமன் குழுவை புறக்கணிப்பது நியாயம் இல்லை.அக்குழுவின் முன் சாட்சி சொல்ல மறுப்பது பொருத்தமற்றது.
  2. நால்வருண முறையை ஏற்றுக் கொள்ளக் கூடாது. மக்களிடையே பிறப்பால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் வேதம், சாஸ்திரம், புராணங்கள் போன்றவற்றை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
  3. தீண்டாமை ஒழிக்கப் பட்டு சாலைகள், குளங்கள், கிணறுகள், பள்ளிகள், சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலியவற்றில் சகலருக்கும் சம உரிமைகள் தரப்பட வேண்டும், இதை வலியுறுத்தி அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
  4. மக்கள் ஜாதிப் பட்டத்தையும், வகுப்புப் பட்டத்தையும், அடையாளக் குறிகளையும் பயன்படுத்தாது ஒழிக்க வேண்டும்.
  5. பெண்களுக்கு 16 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்யப்பட வேண்டும்.
  6. விவாகரத்து உரிமை, விதவைகள் மறுமணம், சொற்ப செலவில் திருமணம், ஒரு நாள் திருமணம் போன்றவை அமுலுக்கு வர வேண்டும்.
  7. கல்வி நிலையங்களில் தாய்மொழியிலேயே கல்வி தரப்பட வேண்டும். பிறமொழிப் பாடங்களுக்குப் பொதுப் பணத்தை உபயோகிக்கக் கூடாது.
  8. பள்ளிக்குச் செல்லத்தக்க சிறுமிகளுக்கு ஆரம்பக் கட்டாயக் கல்வி தரப் படவேண்டும்.
  9. தாழ்த்தப்பட்ட குடும்பத்துப் பிள்ளைகளுக்கு பள்ளியில் புத்தகம், உணவு, உடை போன்றவை இலவசமாக அளிக்கப் பட வேண்டும்.
  10. பெண்களுக்குச் சம சொத்துரிமை, வாரிசு பாத்யதை, ஆண்களைப் போலவே தொழில் நடத்த சம உரிமை, ஆசிரியர் பதவியில் அதிக இடம் முதலியவை வழங்கப்பட வேண்டும். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பதவி முழுதும் பெண்களுக்கே வழங்கப்பட வேண்டும்.
  11. பள்ளிகளில் மூடநம்பிக்கையுள்ள புத்தகங்களைப் பாடமாக வைக்கக் கூடாது.
  12. ஜாதி வேறுபாடு காண்பிக்கும் ஹோட்டல்களுக்கு உரிமை தரக்கூடாது.

என்பவை தொடரும் பட்டியலில் மிகவும் முக்கியமானவை.தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் நடுநிலை வகிக்காத அரசை கண்டித்தும், அதனால் துன்பப்பட்ட தொழிலாளர்களுக்கு அனுதாபம் தெரிவித்தும் மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இத்தீர்மானங்களில் இருந்து சுயமரியாதை இயக்கம் அரசியலில் ஆங்கில அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இருந்தாலும் சமூக சீர்திருத்தங்களைக் கோருவதில் சமரசமற்ற முறையில் இயங்குவதாக இருந்தது தெளிவாகத் தெரிகிறது.

1930ஆம் ஆண்டு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு ஈரோட்டிலும், 1931ஆம் ஆண்டு மூன்றாவது மாநாடு விருதுநகரிலும் நடைபெற்றது. இந்த இரண்டு மாநாட்டிலும் சுயமரியாதைப் பெண்கள் மாநாடு, சுயமரியாதை வாலிபர்கள் மாநாடு ஆகியவை தனியாக நடைபெற்றன. இவற்றில் முக்கியமான பல சீர்திருத்த கருத்துக்கள் தீர்மானங்களில் முன் மொழியப் பட்டன.

குழந்தைத் திருமணம், தேவதாசி முறை முதலியவற்றை இப்பெண்கள் மாநாடுகள் வன்மையாகக் கண்டித்த அதே நேரம் பெண்களின் திருமண வயதை முறைப்படுத்திய சாரதா சட்டத்தை மகிழ்வுடன் வரவேற்றன.

சொத்தில் சம உரிமை, கார்டியனாக இருப்பது, தத்து எடுத்துக் கொள்வது போன்றவற்றில் சம உரிமை, சட்டமன்றம் மற்றும் நகர்மன்றங்களுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட ஏற்பாடு செய்வது, பெண் கல்வியை 11 வயதோடு நிறுத்தாமல் 30 வயது வரை படிக்க வைத்தல், பெண்களை காவல் துறை மற்றும் ராணுவத்தில் சேர்த்தல், அனாதை விடுதிகள் திறப்பு, ரயில் நிலையங்களில் பெண்கள் தங்குவதற்கென்று தனியறை, பெண் ஊழியர்கள் நியமனம், கள்ளுக்கடை ஒழிப்பு போன்றவை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம் குறித்த அக்கறையுடன், அவர்களுக்கென தனி மாநாடு ஏற்படுத்தித் தந்த முதல் அமைப்பு சுயமரியாதை இயக்கமே ஆகும்.

(தொடரும்) *Download As PDF*