Monday 31 August 2009

17. பெரியார் வரலாறு- கடந்து வந்த பாதையை கொஞ்சம் திரும்பிப்பார்ப்போம்..

17. நீதிக் கட்சிக்கு ஆதரவு அளித்த ஈ.வெ.ரா!

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியே வந்த சமயம் தான் ஈ.வெ.ரா.வின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலமாகும். பதினாறு அத்தியாயங்களை கடந்து விட்ட நாம் இனி கொஞ்சம் வேகமாக பயணிக்கப் போகிறோம். அதனால் நாம் கடந்து வந்த அத்தியாயங்களை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

***
ஈரோட்டில் பெரிய செல்வந்தரான வெங்கட்டர்நாயக்கருக்கும், தாயார் சின்னத்தாயம்மையாருக்கும் இரண்டாவது மகனாக 1879ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ம் நாளில் பிறந்தார் ராமசாமி. சிறுவயது முதலே அதிகம் சுட்டிச் சிறுவனாக இருந்ததால் பாட்டியின் வீட்டில் வளர்ந்தார். துடுக்குத்தனம் குறையாததால் தொடர்ந்து படிக்க வைக்காமல் தனது மண்டியிலேயே மூட்டைகளுக்கு பெயர் எழுதும், வேலையை கொடுத்தார் வெங்கட்டர்.

***
கடைக்கு வரத்தொடங்கிய பின்னும் துடுக்குத்தனம் குறையவில்லை. கேள்விகள் கேட்பதில் வல்லவன் என்ற பட்டமே கொடுக்கும் அளவுக்கு ராமசாமியிடம் கேள்விகள் இருந்தது. வலிப வயது. எல்லா செல்வந்தர்களைப் போலவே ராமசாமியும் மைனராக சுற்றினார். பையனின் போக்கில் மாற்றம் வரவேண்டும் எனில் மணம் முடித்து வைப்பது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு ராமசாமியின் பெற்றோர்கள் வந்தார்கள்.

***

நாகம்மையைத் தான் மணப்பேன் என்று ராமசாமி சொன்னதும் அதிர்ச்சியாக இருந்தது பெற்றோருக்கு. உறவுக்காரப்பெண் தான் என்றாலும் நாகம்மையின் குடும்பம் மிகவும் வறுமையானது. இவர்களோ செல்வச்செழிப்பு மிக்கவர்கள். ராமசாமியின் தாயார் சின்னத்தாயம்மையார் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார். ராமசாமி பிடிவாதமாக சொல்லி விட்டார். கட்டினால் நாகம்மை. இல்லையெனில் கல்யாணமே வேண்டாம்.வேறு வழி இல்லாமல் சம்மதித்தனர். மணம் முடிந்தது.

***

ஆனாலும் ராமசாமியின் போக்கில் பெரியதாக மாற்றம் தெரியவில்லை. ஏதேதோ செய்து.. தமது கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கதமாதிரி நாகம்மையை தயார் செய்து விட்டார் ராமசாமி. கொஞ்ச நாள் கழித்து கருவுற்றார் நாகம்மை. அழகான பெண்குழந்தை பிறந்த்து. அதுவும் ஆறு மாதங்களிலேயே என்ன நோய் என்று புலப்படாத நோய்க்கு பலியாகிப்போனது. அதன் பிறகு அவர்கள் குழந்தயே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

***

மாறாமல் கேள்விகளுடனே சுற்றி வந்துகொண்டிருந்த ராமசாமிக்கும், அவரது தந்தை வெங்கட்டருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டது. ஈரோட்டில் இருந்து கிளம்பி காசிக்கு போய்ச்சேர்ந்தார் ராமசாமி. பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு சேறு போட எந்த சந்திரமும் இல்லை அங்கு! குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளில் இருந்து பசியாறினார். மொட்டை போட்டு சாமியாராக சிலகாலம் சாப்பட்டிற்கு வழி இன்றி நாட்களை கடத்தினார். பிறகு காசியைவிட்டு பயணமாகி தெற்கு நோக்கி வந்து சேர்ந்தார். எல்லுரில் இருக்கும் ஒரு நண்பரிடம் வந்து சேர்ந்த செய்தியறிந்து தேடியலைந்து கொண்டிருந்த தந்தை வெங்கட்டரே நேரில் வந்து அழைத்துச்சென்றார்.

***

ஈரோட்டுக்கு அழைந்து வந்தபின் ’வெங்கட்டநாயக்கர் மண்டி’என்றிருந்த கடையின் பெயரை ’ஈ.வெ.ராமசாமி மண்டி’என்று பெயர் மாற்றி கடையை ராமசாமி வசமே ஒப்படைத்தார். வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது. இந்த சமயத்தில் தேவஸ்தான கமிட்டியில் சேர்க்கப்பட்டார் ராமசாமி. நம்பிக்கை இல்லாவிட்டாலும் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்தார். 1919ல் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டபோது தான் வகித்த சேர்மன் பதவி உட்பட அனைத்து பதவிகளையும் தூக்கி எறிந்து, கதர் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

***

ராமசாமியின் தங்கை கண்ணம்மாவும், இல்லாள் நாகம்மையாரின் உதவியோடும் கள்ளுக்கடை மறியல், கதர் விற்பனை என்று வாழ்க்கை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. சாதிய அடக்குமுறையை எதிர்த்தும் போரிட்டார். கேரளாவில் உள்ள வைக்கத்தில் தெருவுக்குள் கீழ்சாதிக்காரர்களை விட மறுத்த ஆதிக்க சாதிகளுக்கு எதிராக, மக்களை திரட்டி தெருவுக்குள் நுழைந்தார். அதனாலேயே வைக்கம் வீரர் என்றும் அழைக்கப்பட்டார்.

***

இடையிலேயே பத்திரிக்கை ஒன்றையும் தொடங்கி, காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவாக எழுதி வந்தார். காங்கிரஸ் கட்சி தலைமைப் பதவியும் தேடி வந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிப் பார்த்தார். ஒன்றும் செய்ய முடியாது என்ற முடிவுக்கு வந்த போது வெளியே வந்தார் ஈ.வெ.ரா.

***
இனி...

காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய பின், அதன் போலி முகத்திரையை தொடர்ந்து கிழித்துவந்தார். குடியரசு பத்திரிக்கையின் கட்டுரைகளும், தலையங்கங்களும் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. ஈ.வெ.ராமசாமியின் கட்டுரைக்கு போகுமிடமெல்லாம் விளக்கம் சொல்லிச் சொல்லியே ஓய்ந்து போனார்கள் கதர்சட்டைக்காரர்கள்.

பார்ப்பனர் அல்லாத இளைஞர்கள் பலரிடம் ஈ.வெ.ரா. வின் எழுத்துக்கள் மாற்றங்களைக் கொண்டு வரத்தொடங்கியது. ஈ.வெ.ராமசாமியின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் பலர் காங்கிரஸ் கட்சியை விட்டு ஈ.வெ.ரா.வின் பக்கம் வரத்தொடங்கினார்கள்.

தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமியினால் பரவலாக்கப்பட்ட கதர் இயக்கம் பார்பணர்களின் கையில் போய்ச் சேர்ந்தது. பொங்களூருக்கு 1927ல் காந்தியடிகள் வந்திருந்தார். அவரை சந்தித்து பேசினால் தமிழக காங்கிரஸ் கட்சியில் ஏதாவது மாற்றம் நடக்கும் என்று நம்பிய ஈ.வெ.ரா. பெங்களூருக்கு கிளம்பிப் போனார்.

காந்தியடிகளுடன் இருந்த தேவதாஸ் காந்தியும், ராஜாஜியும் மகிழ்ச்சியுடன் ஈ.வெ.ரா.வை வரவேற்று காந்தியடிகளிடம் அழைத்துப் போனார்கள். நாயக்கருக்கு காங்கிரஸ் மீது என்ன கோபம்? என்று கேட்டார் காந்தியடிகள். நாடு சுதந்திரம் பெற வேண்டுமானால் முதலில் காங்கிரஸ் கட்சியை ஒழிக்கவேண்டும், அடுத்ததாக சாதியை ஒழிக்க இந்துமதத்தை ஒழிக்கவேண்டும், மூன்றாவதாக பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும் என்று பேசினார் ஈ.வெ.ரா.

நீங்கள் மிகவும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது, எதற்கும் இன்னும் இரண்டொரு முறை நாம் சந்தித்து பேசுவோம். அப்புறம் முடிவு செய்யலாம் அதுவரை காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தங்கள் என்று கேட்டுக்கொண்டார் காந்தியடிகள்.

சரி இனி இவரிடம் பேசிப் பயனில்லை என்றுணர்ந்த ஈ.வெ.ரா, இது ஒத்துவராது என்று தெரிவித்து விட்டு திரும்பி தமிழகத்திற்கு வந்தார். வாசலில் இருந்த ராஜாஜியிடமும் நடந்த உரையாடலின் சாராம்சத்தை சொல்லி விட்டு வந்திருந்தார். அதன் பின்னர் காந்தியடிகளின் நிர்மாணத்திட்டங்களை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். பல்வேறு கட்டுரைகளை குடியரசு பத்திரிக்கையில் எழுதத்தொடங்கினார். பார்ப்பனர் அல்லாத நீதிகட்சிக்கு தனது தார்மீக ஆதரவை அளித்து வந்தார் ஈ.வெ.ரா.

(தொடரும்) *Download As PDF*

Saturday 29 August 2009

தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இந்து கோயில்களைத் தரைமட்டமாக்குக!

தமிழர்களின் முன்னேற்றத்திற்கு இந்து கோயில்களைத் தரைமட்டமாக்குக!

நம் திராவிட மக்கள் புத்தி இல்லாதவர்களாக, மடையர்களாக, காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றனர். இன்னும் நாம், மதத்தின் பேரால், கடவுளின் பேரால் மட்ட சாதி ஆக்கப்பட்டு இழிநிலையில் இருப்பது பற்றிக் கவலைப்படுவதே இல்லை. இப்படி எதனால் காட்டுமிராண்டியோ, இழிமக்களோ ஆனோமோ அந்த மதத்தையும், கடவுளையும் பற்றிச் சிந்திப்பதே இல்லை. என்ன காரணம்? நம் மக்களுக்குப் புத்தியும் இல்லை மானம் இல்லை. இதன் காரணமாகவே ஏமாறுகின்றோம். பரம்பரை பரம்பரையாக நாம் ஏன் கீழ்ச்சாதி? பரம்பரை பரம்பரையாக அவன் ஏன் மேல்சாதி? என்று இந்த அதிசய அற்புதக் காலத்திலும் எவன் சிந்திக்கின்றான்? இந்த நிலைமைகளை மாற்ற வேண்டும் என்று எங்களைத் தவிர எந்தப் பொதுத் தொண்டுக்காரன் பாடுபட்டான்? எவன் சிந்தித்தான்?

பொதுத் தொண்டன் பொதுத்தொண்டு செய்கின்றேன் என்று கூறுகின்றானே, அவனும் சட்டப்படி சாத்திரப்படி இழிமகன்தானே! அவனும் பார்ப்பானுக்கு சூத்திரன் என்கிற வைப்பாட்டி மகன்தானே என்று நினைத்து, எவன் பொதுத்தொண்டு செய்கின்றான்? மக்களிடம் சென்று “நீங்கள் பக்திமான், மேலானவர், தர்ம புருஷன்'' என்று கூறினால் காசு கொடுப்பான். அதை விட்டுவிட்டு, “நீங்கள் மடையர்கள், கல்லைக் கும்பிடுகின்றீர்கள், சாணியைப் பிள்ளையார் என்கிறீர்கள்'' என்று கூறிக் கொண்டு “பசிக்குது கொஞ்சம் சோறு கொடுங்கள்'' என்றால் என்ன கூறுவான்? “உன்னுடைய லட்சணத்துக்குச் சோறு வேறா? போடா போடா'' என்றுதானே கூறுவான்?

இதுவரையில் இந்த நாட்டில் எவரும் செய்யாத தொண்டை நாங்கள்தான் செய்கின்றோம். இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய தொண்டு ஒன்று இருந்தால், இதுதான் என்று நினைத்தபோது வருகின்றோம். இந்த நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்ல, மடமையைத் திருத்த எந்தப் படித்தவன், புலவன் முன் வருகின்றான்? அவனவன் வயிற்றுப் பிழைப்புக்கே தாம் படித்ததைப் பயன்படுத்துகின்றான். மற்றபடி பணக்கார லட்சாதிபதிகள் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாரும் இதுபற்றிப் பாடுபடுகின்றனரா? இப்படி மக்கள் மூடர்களாய் இருந்தால்தான் நாம் கொள்ளை அடிக்க வசதியாக இருக்கும் என்று கருதிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் தட்டிப் பேச இங்கு ஆளே கிடையாது. மேல் நாட்டுக்காரன் அவற்றை எல்லாம் விரட்டி விட்டு அறிவுக்குப் பொருத்தமான முறையில் கடவுளையும் மதத்தையும் அமைத்துக் கொண்டான். அதன் காரணமாக, அறிவியலில் அதிசய அற்புதங்களை நாளுக்கு நாள் உண்டாக்கிய வண்ணம் இருக்கின்றான். அந்த நாட்டில் இப்படி எல்லாம் ஆக அங்குக் கடவுள் துறையில் மதத் துறையில் அறிவுத் துறையில், மாறுதல் உண்டாக்க அறிஞர்கள் கிளம்பிச் சீர்திருத்தினார்கள். நாம் இத்தனைக் கோயில் குட்டிச் சுவரினை வைத்துக் கொண்டு சாதித்தது என்ன? நம்மை சைனாக்காரனும் பாகிஸ்தானும் விரட்டுகின்றான். ஆண்டுக்கு 250 கோடி செலவில் பட்டாளத்தை வைத்துக்கொண்டு இருந்தாலும், நேரு (இந்தியாவின் தலைமை அமைச்சர்) நடுங்கிக் கொண்டு இருக்கின்றாரே?

தோழர்களே! ரயில் வந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. பஸ் வந்து 50 வருஷம் ஆகின்றன. இன்னும் தந்தி, ரேடியோ போன்ற வசதிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கின்றன. இன்னும் இதைவிட அறிவியல் அதிசயம் நம் நாட்டிற்கும் வரப்போகின்றது. லண்டனில் நடக்கும் டான்சையோ சினிமாவையோ இங்கு இருந்து கொண்டே பார்த்துக் களிக்கும்படி "டெலிவிஷன்' வெகு சல்லிசாக வரப்போகின்றது. இந்த டெலிவிஷனால் லண்டனில் சினிமா, நாடகக்காரர்களுக்குப் பிழைப்புக் குறைந்து கொண்டே வருகின்றதாம். காரணம், பலர் டெலிவிஷன் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டில் இருந்தே பார்த்துக் கொள்கின்றனர்.

ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் போட்டிப் போட்டுக் கொண்டு, சந்திர மண்டலத்திலும் குடியேற முயற்சி செய்கின்றான். நமக்கு மட்டும் அப்படிப்பட்ட அறிவு இல்லை என்றால், நாம்தான் கல்லைக் கடவுளாகக் கும்பிடுகின்றோமே! மாட்டுச் சாணியையும் மூத்திரத்தையும் பஞ்சகவ்வியம் என்று கலக்கிக் குடிக்கின்றோமே! சாம்பலும் சுண்ணாம்புப் பட்டையும், செம்மண் பட்டையும் அடித்துக் கொள்ளுகின்றோமே! நாம் என்றைக்கு ஈடேறுவது?

முன்னோர்கள் சொன்னார்கள் மதம் சொல்லுகிறது ரிஷிகள், மகான்கள் சொல்லுகின்றனர் என்ற கருதாமல், தாராளமாக அறிவுக்கு ஆராய்ச்சிக்கு வேலை கொடுத்து உன் புத்தி சொல்லுகின்றபடி நட என்றுதான் கூறுகின்றோம். ஆனால், புத்தர் ஒருவர்தான் “உன் புத்திக்கு ஏற்றபடி, அது சொல்லுகின்றபடி நட. முன்னோர்கள் பெரியவர்கள் சாஸ்திரம் சொல்லுகிறது என்று கேட்காதே! உன் புத்தி சொல்லுகின்றபடி நட'' என்றார். அதன் காரணமாகவே பார்ப்பனர்கள் புத்த நெறியினை ஒழித்துவிட்டார்கள். அந்தக் கொள்கை இன்று சீனா, ஜப்பான், சிலோன், திபெத் ஆகிய நாடுகளில் இருக்கின்றது. இன்று புத்தன் யார் என்று இங்கு பல பேர்களுக்குத் தெரியாது. இப்படிப் புத்தனுக்குப் பிறகு எவனுமே தோன்றவே இல்லையே! இந்த 2500 ஆண்டில் நாங்கள்தான் தோன்றி பாடுபட்டு வருகின்றோம்.
(10.10.1960 அன்று, தூத்துக்குடியில் ஆற்றிய சொற்பொழிவு) *Download As PDF*

Saturday 15 August 2009

அவசியமான காரியங்கள்

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத் துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும் பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப் படவேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.

அவைகளில் முதலாவது எது வென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களி லும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண் களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டிய தாகும்.

ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும். இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட் பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக்கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தி யாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத்தவறான காரியமாகு மென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம்.

ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களாயிருக்கின்றோம்.தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத் தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை.

ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப் படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்யவேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப் படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவது முண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட் டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத் தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும்.

என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத் தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப்போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமான தென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம். (‘பகுத்தறிவு’ - 1938) *Download As PDF*

Sunday 9 August 2009

தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - பாகம்-3

(தொடர்ச்சி..3)


கம்பனுக்கு சிலை வைத்தது மானம் கெடுவதா?

உலகில் ஒரு மாபெரும் மானம் கெட்ட சமுதாயம் என்றால் அது கம்பனுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூறும் கூட்டமேயாகும்.

இன்று நம் நாட்டில் சமதர்மம் என்பது ஜாதியில், செல்வத்தில், பொருளில் என்பது மாத்திரம் அல்லாமல் குணத்திலும் சமதர்மம் என்பதாக கருதப்படுகிறது.

பார்ப்பானும், பறையனும் சமம்; முதலாளியும், பிச்சைக்காரனும் சமம் என்பதோடு யோக்கியனும், அயோக்கியனும் சமம். தமிழர் சமுதாயத்திற்கு நன்மை செய்தவனும், கேடு செய்து கூலிவாங்கி பிழைப்பவனும் சமம், சாணியும், சவ்வாதமும் சமம் என்ற அளவுக்கு இன்று நம் நாட்டில் சமதர்மம் தாண்டவமாடுகிறது.


மக்களிடம் சமத்துவம் ஏற்படுவதற்கு முட்டுக்கட்டை போடுவதா?

இது ஒருபுறம் இருந்தாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக கீழ்மைப்படுத்தப்பட்டு இழிநிலையில் இறுத்தப்பட்ட தமிழன் விடுதலை பெற்ற மனிதத் தன்மை அடைந்த மற்ற உலக மக்களுடன் சரிசமமாய் வாழவேண்டுமென்று உயிரைக் கொடுத்து சிலர் பாடுபடுகிற போது இந்த தமிழ்ப் புலவர் கூட்டமும், அவர்களால் முட்டாள்களாகப்பட்ட தமிழர் கூட்டமும், தமிழ், தமிழ் மொழி, தமிழர் சமுதாயம் என்னும் பேரால் முட்டுக்கட்டை போடுவது என்றால் இந்தக் கூட்டத்திற்கு என்றைக்குத் தான் தன்மான உணர்ச்சி வந்து மனிதத்தன்மை ஏற்படப் போகிறது?


பார்ப்பான் உன் தமிழை ஏற்கிறானா? ஏன்?

அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதிவைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமில்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டத்தகாதவான வைத்திருக்கிறானே?

இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக்கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா? “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய்; நான் கேட்கிறேன், உன் தமிழையும், உன்னையும் உள்ளே விடாமல் இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே? மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன்.


தமிழ்ப்படித்தான் பலன் இதுதான்!

புலவனே! நீ கெடுவதோடு தமிழ் மக்களை ஒவ்வொருவனையும் பார்த்து “நீ யாருக்கு பிறந்தவன்?” என்று கேட்கும்படி செய்கிறாயே? இதுதானே உன் தமிழின், தமிழ் சமுதாயத்தின் பெருமை?

தமிழ் உயர்மொழி எனில் தமிழன் கீழ்மகனானது எப்படி?

தமிழ் உயர்மொழியானால், தமிழன் கலப்படமற்ற சுத்தப் பிறவியானால், தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற காரணத்திற்கு ஆக உன்னை சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று கடவுள் சொன்னதாக சாஸ்திரம் எழுதிவைத்து, “கீதை” வெங்காயம் சொல்லுகிறது என்று சொல்லி உன்னை தீண்டாத ஜாதியாக பார்ப்பானும், அவன் பொண்டாட்டி, பிள்ளை, ஆத்தாள், அக்காளும் நடத்துகிறார்களே? நீ நாக்கைப் பிடுங்கிக் கொண்டாயா? நீ யாருக்கு பிறந்தாய் என்பது பற்றி சிறிதவது சிந்தித்து இருந்தால், என்னை நீ யாருக்குப் பிறந்தாய் என்று கேட்டு இருக்க மாட்டாய்.

எனக்கு நான் யாருக்குப் பிறந்தேன் என்பது பற்றி கவலை இல்லை. அது என் அம்மா சிந்திக்க வேண்டிய காரியம். நான் யாருக்குப் பிறந்தேன் என்று என்னாலும் சொல்ல முடியாது – தம்பீ! உன்னாலும், அதாவது நீ யாருக்கு பிறந்தாய் என்று (உன்னாலும்) சொல்ல முடியாது; அந்தப் பிரச்சினையே முட்டாளுக்கும், அயோக்கியனுக்கும் தான் தேவை.
மனிதனுக்கு மானம் தேவை!

யாருக்குப் பிறந்தாலும் மனிதனுக்கு மானம் தேவை; அது உன்னிடம் இருக்கிறதா? என்னிடம் இருக்கிறதா? என்பது தான் இப்போது சிந்திக்க வேண்டிய தேவை.

அதையும் விட தமிழ் மொழியிலும், தமிழ்ச் சமுதாயத்திலும் இருக்கிறதா? இருப்பதற்கு தமிழ் உதவியதா? உதவுகிறதா? என்பதுதான் முக்கியமான, முதலாவது கேள்வி.

ஈனசாதியாக்கிய முட்டாளை வணங்குவது ஈனமல்லவா?

தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதால் உனக்கு பொத்துக் கொண்டது. ஆனால் தமிழன் ஈனஜாதிப்பயன் என்று கூறி உன்னை ஈனஜாதியாக நடத்துவது பற்றி உனக்கு எங்கும் பொத்துக் கொள்ளவில்லை! அது மாத்திரமல்ல; முட்டாள் பசங்கள் உன்னை ஈனஜாதியாய் நடத்துகின்றவர்கள் காலில் விழுகிறீர்கள். அவனை சாமி என்று கூறுகிறீர்கள், பிராமணர்கள் என்று ஒப்புக் கொள்ளுகிறீர்கள்.


சிந்தித்துப் பார்! நீ யார், நீங்கள் யாரென்று?

“வாழ்க்கை இன்ப துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட சமத்துவ சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா இல்லையா என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் ஒண்டே யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்வப் பெண் குழந்தைகளியும், அன்பு சகோதரிகளையும் மனதில் கொண்டு யோசித்துப் பாருங்கள்.

உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாய் இருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். இன்று உலகில் கீழ்சாதியார் என்பவர்களுக்கு சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தின் இடமிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாய் வாழ வேண்டுமென்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும், நமது சகோதரிகள் விஷயத்திலும் நம் பெண் குழந்தைகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா?


(முற்றும்)

---------------------------
நன்றி :
தமிழும், தமிழரும் – தந்தை பெரியார்

வெளியீடு:-
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007. *Download As PDF*

Saturday 8 August 2009

தமிழும், தமிழரும் – தந்தை பெரியார் - பாகம்- 2

(தொடர்ச்சி..2)

பழமையில் பிடிப்பு இன்னும் நீங்கவில்லையே?

இன்று நமது வாழ்வு, மதம், கடவுள், மொழி, இலட்சியம் என்பன போன்றவை உண்மையான காட்டுமிராண்டித் தன்மை பொருந்தியவை தவிர வேறு எதில் பற்று கொண்டிருக்கிறோம்? எதை குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்?

நான் நாற்பதாண்டுகளுக்கு மேலாகவே சொல்லி வருகிறேன், எழுதி வருகிறேன் (குடிஅரசு பத்திரிகையை பார்)

“கடவுளை கற்பித்தவன் முட்டாள்,

பரப்பினவன் அயோக்கியன்,

வணங்குகிறவன் காட்டுமிராண்டி”

என்று! அதற்காக கோபப்படாத அரசியல்வாதிகள் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றால் இவனுக்கு என்ன பெயர் இடுவது என்றே நமக்கு புரியவில்லை.


தமிழை சீர்திருத்தி வளர்க்க எவனும் முன்வரவில்லையே?

தமிழை, தமிழ் எழுத்துக்களை திருத்த வேண்டும் என்று 1927 வாக்கில் கருத்து கொடுத்தேன்; வகை சொன்னேன். ஒருவனாவது சிந்திக்கவில்லை. பார்ப்பனர்கள் கூட ஏற்றுக் கொண்டார்கள்; நம் காட்டுமிராண்டிகள் சிறிது கூட சிந்திக்கவில்லை.

பிறகு தமிழ் மொழிக்கு (கமால் பாட்சா செய்தது போல) ஆங்கில எழுத்துக்களை எடுத்துக் கொண்டு காட்டுமிராண்டிக்கால எழுத்துக்களை தள்ளிவிடு என்றேன். இதையும் பார்ப்பனர் சிலர் ஏற்றுக் கொண்டனர். தமிழன் சட்டை செய்யவே இல்லை. இந்நிலையில் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று ஒரு இலட்சத்து ஒன்றாவது தடவையாக சொல்லுவதற்கு ஏன் ஆத்திரம் காட்டுகிறாய்? கூலிக்கு மாரடிக்கும் அழுகைத் தொழிலில் வாழ்பவர்கள் போல ஏன் அடித்துக் கொள்ளுகிறாய்?


வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கிவிடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்கு பாதகம் என்ன?


இங்கிலிஷினால் சிறுமை என்ன?

தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன?

நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியமானவனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால் பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது? என்று கேட்கிறேன்.


நம் மக்கள் வளர்ச்சியில் நாட்டம் வேண்டும்?

நம் மக்கள் வளர்ச்சி அடையவேண்டிய நிலை இன்னும் வெகுதூரம் இருக்கிறது. அதனால் வேகமாய்ச் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது.

தமிழ் காட்டுமிராண்டி மொழி – ஏன்? எப்படி?

புலவர்களுக்கு (தமிழ் படித்து தமிழால் பிழைப்பவர்களுக்கு) வயிற்று பிழைப்புக்கு வேறு வழியில்லையே என்கிற காரணம் ஒன்றே ஒன்று அல்லாமல் தமிழர்கள் நல்வாழ்விற்கு தமிழ் எதற்கு ஆகவேண்டி இருக்கிறது.

இத்தனைக் காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால் எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.


முக்கிய புலவர்களும், மத உணர்வுள்ள ஆரிய அடிமைகளே!

இன்று தமிழ் உலகில் தமிழ்ப் புலவர்களில் 2, 3 புலவர்களின் பெயர்கள் அடிப்படுகின்றன. அவர்கள் தொல்காப்பியன், திருவள்ளுவன், கம்பன்.

இம்மூவரில்

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி.

திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்றவகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச்சென்றார்.

கம்பன் இன்றைய அரசியல்வாதிகள், தேசபக்தர்கள் பலர் போல அவர் படித்த தமிழ் அறிவை தமிழ் எதிரியாகிய பார்ப்பனர்க்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான். முழுப்பொய்யன். முழு பித்தலாட்டக்காரன். தன்னை பார்ப்பானாகவே கருதிக்கொண்டு பார்ப்பான் கூட சொல்ல பயப்படும் கருத்துக்களையெல்லாம் கூறி தமிழர்களை நிரந்தர கீழ்மக்களாக்கிவிட்ட துரோகியாவான்!


சாதியை சாதித்தொழிலை ஆதரித்தவர்கள்


இம்மூவர்களும் சாதியையும், சாதித்தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்களே ஆவார்கள்.

சந்தர்ப்பம் நேரும் போது இக்கருத்தை நல்ல வண்ணம் விளக்க காத்திருக்கிறேன். இவர்களை விட்டு தமிழர்கள் இனி எந்த புலவனை, எந்த இலக்கியத்தை தமிழன் நன்மைக்கு ஆதாரமாக எடுத்துக்காட்ட தமிழபிமானிகள் என்பவர்கள் முன்வரப்போகிறீர்கள் என்று கேட்கிறேன்.

(தொடரும்) *Download As PDF*

Friday 7 August 2009

தமிழும், தமிழரும் – தந்தை பெரியார்

(தந்தை பெரியாரால் எழுதப்பட்ட இச்சிறு நூல் இங்கே மூன்று பகுதிகளாக வலையேற்றம் செய்யப்படுகிறது)

தமிழ் காட்டு மிராண்டி மொழி – ஏன்? எப்படி?


தமிழ் மொழியை நான் ஒரு காட்டுமிராண்டி மொழி என்று சுமார் 40 ஆண்டுகளாகக் கூறி வருகின்றேன். இடையில் இந்தியை நாட்டுமொழியாகவும், அரசியல் மொழியாகவும் பார்ப்பனரும், பார்ப்பன ஆதிக்க ஆட்சியும் முயற்சிக்கின்ற சந்தர்ப்பங்களில் அதன் எதிர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள தமிழுக்கு சிறிது இடம் கொடுத்து வந்தேன்.


ஆங்கிலத்துக்கு ஆதரவு

ஆயினும் ஆங்கிலமும் தமிழின் இடத்தில் இருக்கத் தகுந்த மொழியாகும் என்று பேசியும், எழுதியும் முயற்சித்தும் வந்திருக்கிறேன்.

அக்காலத்தில் எல்லாம் நம் நாட்டில் ஆங்கிலம் அறிந்த மக்கள் மிக மிகச் சிலரேயாவர். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் 100க்கு சுமார் 5 முதல் 10பேருக்கும் உட்பட்ட எண்ணிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் நூற்றுக்கு 75 பேர்கள் போல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாகவே இருந்து வருகிறார்கள். ஆனதால் அவர்களிலும் 100க்கு 90 பேர்கள் போல் பகுத்தறிவற்ற மக்களாக இருந்து வந்ததால் அவர்களுக்கு மதப்பற்று, கடவுள் பற்று, பழைய பழக்க வழக்க பற்று, குறிபற்று எப்படி முரட்டுத்தனமான பற்றாக இருந்து வந்ததோ – வருகிறதோ அது போன்றே தமிழ் மொழிப் பற்றும் முரட்டுத்தனமாக இருந்து வந்தது, வருகிறது.


தமிழ்ப்புலவர்கள் நிலை

அதிலும் தமிழ் படித்த தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்துவான்களாக… தமிழ்ப்புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும், பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள்.


புலவர்களின் மூட நம்பிக்கையும், பிடிவாதமும்

மற்றும் புலவர், வித்துவான் என்ற பெயரால் யார் வாழ்ந்தவராக, வாழ்பவராக இருந்தாலும் அவர்கள் பெரிய மதப் பற்றுள்ளவர்களாகவும், மதவாதிகளாகவும் இருந்து வருவது ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டதால் புலவர், வித்துவான் என்றால் மேலும் மூடநம்பிக்கைக் காரர்களாகவும், பிடிவாதக் காரர்களாகவுமே இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள்.


பகுத்தறியும் தத்துவ விசாரணை அறவே இல்லாதவர்கள்

அதிலும் கொஞ்ச காலத்திற்கு முன்வரையில் புலவர்கள், வித்துவான்கள் என்றால் 100க்கு 90 பிச்சை எடுத்தே அதாவது இச்சகம் பேசி பிச்சை வாங்கும் தொழில் உடையவர் என்று ஆகிவிட்டதால் பொய்யோ, புளுகோ, கற்பனையோ, ஏதேதோ பேசி பணம் பெறுவதிலேயே கவலையுள்ளவர்களாகவே வாழ்ந்ததால் தத்துவ விசாரணை என்பது அவர்களுக்கு வெகுதூரமாகவே இருக்க வேண்டியதாகி விட்டது.

ஆகவே தான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர் வரை இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்காக அல்லாமல், மற்றெதற்கும் பயன்படுவதற்கு இல்லாதவர்களாகவே ஆகிவிட்டார்கள்.


ஆசிரியர், மாணவர் நிலையும் பகுத்தறிவைத் தரவில்லை

புலவர்களை நீக்கிவிட்டால் மற்ற ஆசிரியர்கள் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனர்களாகவே சமீப காலம் வரை அமர்ந்திருக்கும்படியாக நம் நாடு இருந்து வந்ததால், அவர்களிடம் பயின்ற எந்த மாணவனுக்கும் பகுத்தறிவு என்றால் எத்தனை படி? என்று கேட்கும் நிலை தான் மாணவர்களது நிலையாக ஆகிவிட்டது.

விஞ்ஞானம் பயிற்றுவிக்கும் ஆசிரியனும், விஞ்ஞானம் பயிலும் மாணவனும் அதில் முதல் வகுப்பாக பாஸ் பெற்ற மாணவனும் கூட நெற்றியில் முக்கோடு சாம்பல் பட்டை அணிந்தவனாக இருந்து கொண்டுதான் பயிலுவான். என்னய்யா அக்கிரமம் நீ சயின்சு படிக்கிறாய்; தத்துவ சாஸ்திரம் படிக்கின்றாய்; நெற்றியில் சாம்பல் பட்டை போட்டிருக்கிறாயே என்றால் சிறிதும் வெட்கமில்லாமல் இதற்கும், அதற்கும் என்னய்யா சம்பந்தம்? நீ என்ன நாத்திகனா? என்று கேட்பான்.

இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், குறிப்பாக புலவர் வித்துவான்களுக்கும் இவருடன் உழல்வோருக்கும் தமிழை, தமிழ் மொழியைப் பற்றிய அறிவு எவ்வளவு இருக்க முடியும்?


மக்கள் சிந்தனைக்கு முட்டுக்கட்டை

“அயோக்கியர்களுடைய வயிற்றுப் பிழைப்புக்கு கடைசி மார்க்கம் அரசியல் துறை” என்பது ஆக ஒரு மேல்நாட்டு அறிஞர் சொன்னதுபோல் அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள் மக்களின் மடமையை நிறுத்தி அறிந்ததன் காரணமாய் அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாகக் கொண்டு தாய்மொழிப்பற்று வேஷம் போட்டுக்கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம் மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.


சிந்திக்காத எதிர்ப்புப் பேச்சுக்கள்

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்லுகிறேன்? என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. “வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறு வளர்ப்போம்” என்பதைத் தவிர அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலேயே பேசிவருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும் “தமிழ்மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி” என்பதை தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள்.

நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கிய காரணமாய் சொல்லுகிறேன்.

அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணினியாகட்டும் மற்றும் எவன் தானாகட்டும் இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லாவிட்டால் நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனா?

பிரிமிட்டிவ் (Primitive) என்றால் அதன் தத்துவமென்ன? பார்பேரியன் (Barbarian), பார்பரிசம் (Barbarism) என்றால் அதன் பொருள் என்ன?

3000 – 4000 ஆண்டுகளுக்கு முன் என்பதற்கு பிரிமிட்டிவ், பார்பேரியன், பார்பரிசம் என்பதற்கும் அக்கால மக்கள் அறிவு, அக்கால மக்கள் நிலை முதலியவை என்பவற்றிற்கும் என்ன பேதம் கற்பிக்க முடியும்?

(தொடரும்) *Download As PDF*

Thursday 6 August 2009

என் துணிவு

நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ளவர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.

நான் கண்டதை, அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.

(சாமிமலையில், 24.1.1960இல் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960) *Download As PDF*

Wednesday 5 August 2009

நான் சொல்வது கட்டளையா?

நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.

ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.

ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.

(விடுதலை, கட்டுரை 8.10.1951)

*Download As PDF*

Tuesday 4 August 2009

16. காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஈ.வெ.ரா!

பலமான யோசனைக்குப் பின் பத்திரிக்கையைக் கொண்டு வந்தார் ஈ.வெ.ராமசாமி. 1925ம் ஆண்டு மே மாதம் இரண்டாம் நாள் ஈரோட்டில் இருந்து ’குடியரசு’ என்னும் வார இதழ் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது. மனசாட்சிக்கு உண்மை என்று பட்டதை அஞ்சாது தெரிவிக்கவும், மக்களுக்கு சுயமரியாதை, சகோதரத்துவம், சமத்துவம் ஓங்கி வளர்த்தெடுக்கவும், உயர்வு தாழ்வு உணர்ச்சிகளால் ஏற்படும் சாதிச்சண்டைகளை கலையவும், தேசத்தை முன்னிருத்தாமல் ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேறவேண்டும் என்ற நோக்கத்தில் தாம் பத்திரிக்கை தொடங்கி இருப்பதாக முதழ் இதழிலேயே தம் கருத்தை வெளியிட்டார் ஈ.வெ.ரா.

குடியரசு வெளியான கொஞ்ச காலத்திலேயே தமிழக மக்களிடம் செல்வாக்குப் பெறத்தொடங்கியது. ஆண்டாண்டு காலமாய் சுமந்து வரும் அடிமைசங்கிலியை உடைத்து சுக்கு சுக்கலாக்கும் என்ற வேட்கை அதிகமானதால் மக்களிடம் விரைந்து பிரபலமானது.

தமிழக காங்கிரஸ் தலைவராக சில ஆண்டுகள் பதவி வகித்தார் ஈ.வெ.ரா. பின்னர் டாக்டர் வரதராஜலு நாயுடு என்பவர் தலைவராகவும், ஈ.வெ.ரா காரியதரிசியாகவும் பணியாற்றினார்கள். சென்னையில் இருந்த காங்கிரஸ் கமிட்டியை ஈரோட்டுக்கு மாற்றி, அங்கிருந்தே செயல்பட்டு வந்தார் ஈ.வெ.ரா. அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தான் தமிழக அரசியலில் புதிய திருப்பத்திற்கு அடித்தளமாக அமைந்தது. தமிழ்நாட்டுக் குருகுலம்- என்ற பெயரில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மாதேவி என்ற ஊரில் சிறுவர்களுக்கான விடுதி ஒன்றினை நடத்திவந்தார் வ.வே.சுப்பிரமணி அய்யர். இந்த குருகுலம் காங்கிரஸ் கட்சியின் பொருளுதவியில் நடந்து வந்தது. தொடர்ந்து பணம் கொடுக்க முடியாவிட்டாலும் கட்சியில் இருந்து அவ்வப்போது பணம் வந்துகொண்டிருந்தது. தவிரவும் காங்கிரஸ் கட்சியின் மீது பற்றுக்கொண்ட பலர் நிதி உதவு அளித்தும் வந்தனர். ஈ.வெ.ரா, திரு.வி.க, டாக்டர் வரதராஜலு நாயுடு போன்ற பலரும் வசூல் செய்தும் குருகுலத்தின் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார்கள்.

அதிகம் படித்த வ.வே.சு அய்யர் நடத்தி வந்த குருகுலத்தில் வருணாசிரம அடிப்படியில் நடத்தப்பட்டு வந்தது. பார்ப்பன சிறுவர்களுக்கு தனியிடம், தனித்தண்ணீர், தனி உணவு என்றும் பார்ப்பனர் அல்லாத குழந்தைகளுக்கு வேறு இடம், வேறு தண்ணீர், வேறு உணவு என்று வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். பார்ப்பன சிறுவர்களுக்கு காலை உணவாக உப்புமா போன்றவை சூடாக பரிமாறப்பட்டது. பார்ப்பனர் அல்லாது குழந்தைகளுக்கு பழைய சேற்றையே கொடுத்து வந்தனர். இவ்விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு தெரிய வந்ததும், போக்கை மாற்றிக்கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டது. ஆனால் வ.வே.சு அய்யர் காதில் போட்டுக்கொண்ட மாதிரித்தெரியவில்லை.காங்கிரஸ் மூலமும், கட்சிகாரர்கள் மூலமும் கிடைத்து வந்த பொருளுதவிகளை தர மறுத்தார் ஈ.வெ.ரா. ஆனால் வ.வே.சு அய்யரோ காங்கிரஸில் இன்னொரு காரியதரிசியாக இருந்த பார்ப்பனர் டி.எஸ்.எஸ்.ராஜன் என்பவர் மூலம் பொருளுதவிகளை பெற்றுக்கொள்லத்தொடங்கினார்.

காங்கிரஸ் கட்சியும், பல காங்கிரஸ் கட்சிக்காரர்களும் வ.வே.சு அய்யரின் செயலை கண்டித்தமாதிரித் தெரியவில்லை. உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்தார் ஈ.வெ.ரா. பின்னாலில், 1948-ல் சென்னை மாகான முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓமந்தூரார் பி.ராமசாமி, தம் மகனை சேரன்மாதேவியில் இருக்கும் குருகுலத்திற்கு படிக்க அனுப்பினார். அங்கு அவரது மகன் பார்ப்பன சிறுவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் எடுத்து குடித்தமைக்காக தண்டிக்கப்பட்டான். சாதி தலைவிரித்தாடியதை மகனின் தழும்புகள் மூலம் அறிந்துகொண்ட ஓமந்தூரார் மகனை அழைந்த்து வந்து ஈ.வெ.ராவிடம் காட்டினார். அச்சிறுவனும் அங்கு நிகழ்ந்த அட்டூழியங்களை பட்டியல் போட்டிருக்கிறான்.

பார்ப்பனியத்தின் கொடுமைகளை இனியும் பொருத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தார் ஈ.வெ.ரா. காங்கிரஸ் கட்சியில் இருந்த பார்ப்பனர் அல்லாதவர்களான திரு.வி.க, டாக்டர்.வரதராஜலு நாயுடு, எஸ்.ராமநாதன், சண்முகம் செட்டியார், ஓமந்தூரார், தங்கப்பெருமாள் பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை போன்றோரின் உதவியோடு சாதிய அடக்குமுறைக்கு எதிரான தம் குரலை உயர்த்தினார் ஈ.வெ.ரா. ஆனால் அய்யர் அசைந்து கொடுப்பதாக இல்லை. காங்கிரஸ் மேலிடம் சொன்னால் அய்யர் கேட்பார் என்று எண்ணி காந்திக்கு கடிதம் எழுதினார்கள். காந்தியும் சமபந்தி போஜனமாவது செய்யுங்கள் என்று வ.வெ.சு அய்யருக்கு எழுதினார். இதற்கும் அய்யர் மறுத்துவிட்டார்.

இந்த காலகட்டத்தில் தான் ஈ.வெ.ராவுக்கு பளிச்சென்று ஒரு விசயம் புலப்பட்டது. பார்ப்பனர் பேசுகின்ற தேசியம் போலி; தீண்டாமை ஒழிப்பு வாய்ஜாலம்; ஒற்றுமை ஒருமைப்பாடு கொள்கையாவும் பித்தடாட்டம் என்று உணர்ந்துகொண்ட ஈ.வெ.ரா தமிழகம் முழுவதும் இதனை பிரச்சாரம் செய்தார். ஒரு முறை காங்கிரஸ்கட்சியின் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் போய் இருந்த போது, ஒரு பார்ப்பனர் வீட்டில் சாப்பிட வேண்டி வந்தது, ஈ.வெ.ராவுக்கு திண்ணையிலும், உடன் வந்த சீனிவாச அய்யங்காருக்கு வீட்டிற்குள்லேயும் உணவு பரிமாறப்பட்டதும் கூட சாதிய துவேசம் தான் என்பதை உணர்ந்துகொண்டார். தமிழக மக்கள் விழித்துக்கொள்ளத் தொடங்கினார்கள். ஈ.வெ.ராமசாமியின் தொடர் பிரச்சாரத்தின் பயனாக சாதிய வேற்றுமையை வளர்த்து வந்த குருகுலத்திற்கு கிடைத்து வந்த பண உதவிகள் நின்று போனதால்.. குருகுலம் மூடப்பட்டது.

காங்கிரஸ் காரியக்கமிட்டியில் இருந்த சி.ராஜகோபாலாச்சாரியார், கிருஷ்ணமாச்சாரியார், கே.சந்தானம், என்.எஸ்.வரதாச்சாரியார், ஆலாசியம், டி.எஸ்.எஸ்.ராஜன் போன்ற பார்ப்பனர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பார்ப்பன துவேசப் பிரச்சாரம் செய்வதாகக்க்கூறி காங்கிரஸ் கமிட்டியைவிட்டு விலகிச்சென்றனர். இவர்களின் செயலை சில பார்ப்பனர்கள் பச்சையாக ஆதரித்து எழுதினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

பனகல் அரசர் முதலமைச்சராக இருந்த போது இந்து அறநிலை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தார். இதனால் கோவில், மடாலயங்கள் சொத்துக்கள் மீது ஒருழுங்கு முறை புகுத்தப்பட்டது. பார்ப்பனிய சுரண்டல் பெருச்சாளிகளுக்கு இது இடையூராக பட்டது. அதனால்.. தங்களது எதிர்ப்பைக் காட்டி பொதுமக்களிடம் வெறுப்பை சம்பாதித்தார்கள். மடாதிபதிகளையும், அறங்காவலர்களையும் தூண்டி விட்டு, மதத்தில் அரசு தலையிடக்கூடாது என்று எதிர்ப்புக் காட்டினார்கள் பார்ப்பனர்கள். ஆனால்.. காங்கிரஸில் இருந்துகொண்ட நீதிக்கட்சியின் இச்சட்டத்தை வரவேற்றார் ஈ.வெ.ரா. அறநிலையங்களுக்கு ஆபத்தில்லை, சொத்துக்கள் தனிநபர்களிடம் கொள்ளை போகாமல் தடுக்கலாம், கள்வர்களுக்குத் தான் சுரண்ட முடியாது என்று அறிக்கை வெளியிட்டு வெளிப்படையாக ஆதரித்தார் ஈ.வெ.ரா.

ஈ.வெ.ராவின் செயல் பல பார்ப்பனர்களை எரிச்சலடையச்செய்தது. அடுத்ததாக அவர் கையில் எடுத்த ஆயுதம் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம். அதவாது வகுப்பு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு உத்தியோகங்களை வழங்கிடவேண்டும். அரசு பணிகளில் பார்ப்பனர் அல்லாதோருக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்படல் வேண்டும். இவைதான் நீதிக்கட்சி தோன்றிய அடிப்படைக்கொள்கை. இதிலுள்ள நியாயத்தை உணர்ந்ததனாலேயே தொடக்கம் முதல் ஆதரித்து வந்தார் ஈ.வெ.ரா.

காஞ்சிபுரத்தில் 1925-ல் காங்கிரஸ் கட்சியின் மாநிலமாநாடு நடைபெற்றது. திரு.வி.க தான் தலைவர். இங்கேயும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற தீர்மனத்தை கொண்டுவரவேண்டும் என்று ஈ.வெ.ரா வேண்டிக்கொண்டார். ஆனால்.. தலைவர் நிராகரித்தார். எதிர்ப்புகள், வாதங்கள், சண்டைகள் என மாநாடு அமளியாகிப்போனது. கடைசிவரை காங்கிரஸ் ஒத்துக்கொள்ளவே இல்லை. துண்டை உதறி தேளில் போட்டபடி கிளம்பினார் ஈ.வெ.ரா.

‘கல்யாணசுந்தர முதலியார் அவர்களே! நான் வெளியேறுகிறேன். காங்கிரசால் பார்ப்பனரல்லாதவர்கள் நன்மை பெற முடியாது. பார்ப்பனர்களுக்கு அரணாக இருக்கும் காங்கிரஸை ஒழிப்பதே இனி எனது வேலை’ உரக்கச் சொல்லியபடி மாநாட்டு பந்தலை விட்டு வெளியேறினார் ஈ.வெ.ரா. அவர் பின்னாலேயே தன்மானமுள்ள கூட்டமும் வெளியேறியது.

------------------
(தொடரும்) *Download As PDF*

Monday 3 August 2009

ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்..

ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்


Periyar E.V.Ramasamy இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

ஆண், பெண் கூட்டு வாழ்க்கையில் இப்போது வழங்கி வரும் கருத்தமைந்த ‘கற்பு' என்னும் வார்த்தையே அவசியமற்றது என்றும், அது வாழ்க்கை இன்பத்திற்குக் கேடு பயக்கின்றதே ஒழிய, அதனால் நன்மை இல்லை என்றும் சொல்லுவேன். இன்று வழங்கும் ‘கற்பு' பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்களுக்கு இல்லை. அது, பெண்களை நிர்ப்பந்திப்பது போல் ஆண்களை நிர்ப்பந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்க ஈனம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த ஒருதலைக் கற்பேயாகும். பெண்கள் அடிமையாக்கப்பட்டதற்கும் இந்த ஒரு தலைக் கற்பே காரணமாகும். இந்த ஒரு தலைக்கற்பு உள்ளவரை, சமுதாயம் சீர்படப் போவதில்லை என்பதே எனது உறுதி.

ஆண்களின் ஒழுக்க ஈனமான நடத்தைகளை இந்துமதக் கடவுள், சமயம், சாத்திரம், புராணம் ஆகியவை ஒப்புக் கொள்ளுகின்றனவா இல்லையா என்று கேட்கிறேன். இவை கூடாது என்று சொல்லுகிற ஒரு தமிழன், தன்னை இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும். செய்யாவிட்டால், சில பெண்களாவது முன் வந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் துணிவதாகவாவது காட்ட வேண்டும். உரிமையில்தான் சுதந்திர உணர்ச்சி இருக்கிறது. அது இல்லாத இடத்தில் அடிமை உணர்ச்சிதான் இருக்கிறது. அதனாலேயே நமது பெண்கள் அடிமைகளானார்கள். அப்பெண்களின் வயிற்றில் பிறந்த நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம்...

அநேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப் பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது. ‘ஏதோ கடவுள் கொடுக்கிறார். கடவுள் வயிற்றில் கொண்டு விடுகிறார். கடவுளே வளர்க்கிறார். கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார். கடவுளே சாகடிக்கிறார்' என்று கருதிக் கொண்டு, இது விஷயங்களில் மிருகங்களைவிட கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல்கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது, வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில், புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய்க் கேட்கிறபோதும், பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்தக் கலைகளை நமது ஆண் - பெண் இருபாலருமே ஓர் அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப் பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய், சாவு, ஊனம், மனச்சஞ்சலம், பொருந்தா வாழ்வு ஆகியவை பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்க வேண்டும், எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் ‘பொம்பளை நோவு' என்று சொல்லிவிடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும், பெண்கள் அதையும் ‘பொம்பளை வியாதி' என்றுதான் சொல்லுகிறார்கள். இது, பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும்.

ஆண் - பெண் தன்மை, உடல்கூறு, சேர்க்கை விளக்கம், கர்ப்பம், பிள்ளைப்பேறு ஆகியவைகளைப் பற்றிச் சர்க்கார், அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல் வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவை நன்றாக மக்கள் அறிந்தால், இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல்கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். சின்ன தவறுதல் கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். இன்ன இன்ன பதார்த்தம் சாப்பிட்டால், உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, நோய்வரும் என்று கருதினால், எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ, அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால், அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல், இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையைக் கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

(காஞ்சிபுரத்தில் 16.6.1940 அன்று நடைபெற்ற திருமண விழாவில் ஆற்றிய உரை)

 *Download As PDF*

Sunday 2 August 2009

நான் யார்?

எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்பமாகும். குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன்.

காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது.

அம்மாதிரி, அவைகளில் இருந்து வெளியேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.

( குடிஅரசு- 13.1.1945) *Download As PDF*

15. வைக்கம் வீரர்

ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய கேரள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் எழுதிய ரகசியக் கடிதம் தான் ஈ.வெ.ராவின் கையில் கிடைத்தது. கேரள ராஜ்யத்தில் இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது வைக்கம் என்ற ஊர். சிறு கிராமமாகவும் இல்லாமல் பெரு நகரமாகவும் இல்லாமல் மத்திய தரமான ஊர் வைக்கம். அங்கே இருந்த கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்கூடாது என்ற தடையை நீண்ட நாட்களாக நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து போராட்டம் செய்தவர்களை பிடித்து உள்ளே போட்டது சமஸ்தானம். தெருவுக்குள் நுழையும் போராட்டத்தை கேரள காங்கிரஸ்காரர்கள் தொடர்ந்து நடத்தினார்கள். ஒவ்வொரு பிரிவாக தினம் போராட்டத்தில் ஈடுபடுவதும், கைது செய்யப்பட்டதும் உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளுவதுமாக காங்கிரஸ்காரர்களின் போராட்டம் பதினெட்டு நாட்கள் நடந்தது. பத்தொன்பதாம் நாள் போராட்டம் நடத்த ஆள் இல்லாமல் போய் விட்டது. அப்படி உள்ளே போனவர்களில் ஜார்ஜ் ஜோசப், கேசவமேனன் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் முக்கியமானவர்கள். அவர் எழுதிய கடிதம் கண்டுதான் ஈ.வெ.ரா கிளம்பினார்.

திருவதாங்கூர் வந்து கிளர்ச்சியில் ஈ.வெ.ராமசாமி ஈடுபடப் போகிறார் என்ற செய்தி திருவிதாங்கூர் மன்னருக்கு எட்டியது. தமது உயரதிகாரிகளை அனுப்பி மன்னர் சில ஆணைகளை நிறைவேற்றச் சொன்னார். திருவிதாங்கூரிலிருந்து மன்னர் டில்லிக்குப் போகும் போதெல்லாம் தனது பரிவாரங்களுடன் ஈரோட்டில் இறங்குவார். அங்கிருக்கும் வெங்கட்ட நாயக்கரின் சத்திரத்தில் தங்கி இளைப்பாறி, அறுசுவை விருந்துகளையும் அன்பான உபசரிப்பையும் ஏற்றுக்கொண்டு பின் பயணத்தை தொடர்வார். இது அவரது வழக்கம். வெங்கட்டரின் மறைவுக்குப் பிறகும், ராமசாமி இந்த காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்ததால் அவருக்கு பதில் மரியாதையாக மிகப் பெரிய வரவேற்பு ஒன்றை கொடுக்கப் பிரியப் படுவதாகவும், போராட்டத்தில் ஏதும் கலந்து கொள்ளாமல் ராமசாமி திரும்பிச் செல்ல வேண்டுமென்றும் அதிகாரிகள் வைக்கம் வந்திருங்கிய ஈ.வெ.ராவிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் முன் வைத்த காலை பின் வைத்து பழக்கப் பட்டிராத ராமசாமி மன்னரின் கோரிக்கைளை ஏற்க மறுத்து அதிகாரிகளை திருப்பி அனுப்பினார்.

ஈ.வெ.ராவின் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்தனர். சில ஆயிரம் பேர் போராட்டத்தில் குதித்தனர். கோஷங்களும் பேரணிகளுமாய் வைக்கம் நகரமே குலுங்கியது. அரசின் தடையை மீறி தாழ்த்தப் பட்டவர்களுடன் அனுமதி மறுக்கப் பட்ட தெருவுக்குள் நுழைய முயன்ற ஈ.வெ.ராவை கைது செய்தது காவல் துறை. ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப் பட்டது. ஈ.வெ.ராவின் கைதை தொடர்ந்து கோவை அய்யாமுத்து, மயூரம் ராமநாதன் போன்றோரும் தனித்தனியாய் தலமையேற்று கைதானார்கள். நாகம்மையாரும் ஈ.வெ.ராவின் தங்கை கண்ணமாளும் தலைமையேற்று போராட்டத்தை தொடர்ந்தனர். பெண்களின் போராட்டம் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விருவரும் திருவிதாங்கூர் முழுவது சுற்றுப் பயணம் செய்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தைப் பற்றி விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சிறையில் அடைக்கப் பட்டிருந்த ஈ.வெ.ரா, அருவிக்குத்தி என்ற தீவிற்கு ஆறுமாத கடுங்காவல் விதிக்கப்பட்டு நாடு கடத்தப் பட்டார். அங்கு போகும் வழியில் புயலில் சிக்கி படகு வேறு பக்கம் ஒதுங்கியது. சட்டத்திற்கு கட்டுப் பட்ட ஈ.வெ.ரா தாமே முனைந்து படகில் வந்த காவலர்களுக்கும் பாதுகாப்பு தந்து படகை அருவிகுத்தி தீவுக்கு திருப்பி சிறைக்குள் அடைந்து கொண்டார்.

பெண்கள் தலைமையேற்ற தொடர் போராட்டத்தால் திருவிதாங்கூர் மகாராணி அனுமதி மறுக்கப்பட்ட தெருவுக்குள் தாழ்த்தப் பட்டவர்களை உள்ளே விட அனுமதி அளித்தார். இதனை காந்தியடிகளே நேரில் வந்து சிறைக்குள் இருந்த பெரியாரை சந்தித்து தெரிவித்தார். அவர் சொன்னால் மட்டுமே நாகம்மாளும், கண்ணம்மாளும் போராட்டத்தை கைவிடுவார்கள் என்பதால் அவ்வாறு வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

அதன் படி பெரியாரின் வேண்டுகோளை ஏற்று அவ்விருவரும் போராட்டத்தை முடிவுக் கொண்டு வந்தனர். அரசு பணிந்தது, தாழ்த்தப் பட்ட மக்கள் தெருவில் நடக்கும் உரிமையை பெற்றனர். ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட ஈ.வெ.ராவுக்கு நான்கு மாதத்திலேயே விடுதலை கிடைத்தது. திருவிதாங்கூர் மன்னரின் மறைவை ஒட்டி, அரசியல் கைதிகள் அத்தனை பேரும் விடுவிக்கப் பட்டனர். ஈ.வெ.ராவும் வெளியே வந்தார். நேரே ஈரோடு சென்று நோய்வாய்ப் பட்டிருந்த சின்னத்தாயம்மையாரை காண விழைந்தார். 1924, செப் 11ந்தேதி சென்னை மாகாண அரசால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். எப்போதோ பேசிய அரசுக்கு எதிரான மேடைப் பேச்சின் காரணமாக கைது செய்யப்பட்டிருந்தார். போதிய ஆதாரமில்லையென நீதிமன்றம் கூறியது. அரசும் வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டது.

1925, நவம்பர் 29ந்தேதி நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு போராட்ட வெற்றிவிழாக் கூட்டத்தில் ஈ.வெ.ராவும் கலந்து கொண்டார். அங்கு அவருக்கு வைக்கம் வீரர் என்று சிறப்பு பட்டம் சூடி மக்கள் மகிழ்ந்தனர். சாதாரண ஒரு வியாபாரியின் மகனான ஈ.வெ.ராமசாமி, கொண்ட கொள்கைப் பிடிப்பாலும் தமது உறுதியான முடிவினாலும் வைக்கம் வீரராக போற்றப்பட்டார்.

காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் நல்லவண்ணம் வெற்றி வாகை சூடியது. தென்னகத்தில் இத்திட்டம் பரவலாகவும், வெற்றியாகவும் அமைவதற்கு ஈ.வெ.ரா ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது. இந்த சூழ்நிலையில்தான் காங்கிரஸில் ஒரு கருத்து வேறுபாடு முளை விட்டது. சித்தரஞ்சன தாஸர் தலைமையில் சிலர் கூடி, இனி அரசுடன் ஒத்துழைத்து சட்ட மன்றங்களை கைப்பற்றி ஆட்சியமைக்க வேண்டுமென வாதிட்டனர். அதற்கென சுயராஜ்யக் கட்சி என்றொரு அரசியல் அமைப்பினையும் தொடங்கினர். இதன் கிளை தென்னகத்தில் தோற்றுவிக்கப் பட்டு அதனை பார்ப்பனர்களே முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டனர். அப்போதும் ராஜாஜியும், ஈ.வெ.ராவும் காந்தியடிகளின் பக்கமே நின்றனர்.

சுயராஜ்யக் கட்சியின் தோற்றத்தால் மிண்டோ-மார்லி சீர்திருத்தத்தின் விளைவால் இந்தியர்களையும் உயர் உத்தியோகங்களின் நியமிக்க வெள்ளை அரசு ஒத்துக் கொண்டது. அதன் படி அந்த உயர் பதவிகள் அத்தனையும் பார்ப்பனர்களே பெற்றுக் கொண்டனர். எடுத்துக் காட்டாக 1898 முதல் 1930 வரை நியமிக்கப் பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒன்பது பேர் இந்தியர். இதில் 8 பேர் பார்ப்பனர், ஒருவர் நாயர்.

இப்படியாக எல்லா உயர் பதவிகளும் அவர்கள் வசம் ஆட்சி அதிகாரத்தில் நுழைந்துகொள்ள பார்ப்பனர்கள் தீட்டிய இந்த சதித்திட்டத்தினால் வெகுண்டெழுந்த டாக்டர் டி.எம்.நாயர், சர்.பி. தியாகராயர் இருவரும் சென்னையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்னும் நீதிகட்சியைத் துவங்கினர். பனகல் அரசர் ராமராய நிங்கவார், டாக்டர் நடேசமுதலியார் ஆகியோர் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ஆனால்.. காங்கிரஸின் போலி மாயை மூடுபனி போல இருந்ததால் தமிழகத்தலைவர்கள் பலர் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தனர்.

பார்ப்பனர் அல்லாதோர் ஒன்றிணைந்து செயல்படுவதை பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் பார்ப்பனர் அல்லாதோரின் உழைப்புக்கு கிடைக்கும் பெயரையும் புகழையும் பார்ப்பனர்களால் மறைக்கப்பட்டது. வைக்கம் போராட்டமாகட்டும், ஈரோட்டு சாலை மறியலாகட்டும் எதையுமே அவர்கள் வெளியிட வில்லை. நீதிகட்சியினர் நடத்திய ’திராவிடன்’ தமிழ் ஏடும்,’ஜஸ்டீஸ்’(இதன் காரணமாக நீதிகட்சி என்ற பெயரை விட ஜஸ்டீஸ் கட்சி என்ற பெயரை பார்ப்பனர்கள் திட்டமிட்டு பரப்புரைத்து பொதுமக்கள் அண்டவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்) என்ற ஆங்கில பத்திரிக்கையும் இச்செய்திகளை பெரியதாக வெளியிட்டிருந்தாலும்.. இவைகளுக்கு போதிய செல்வாக்கில்லை. ஆகையால் தாமே ஒரு பத்திரிக்கையை தொடங்குவது என தீர்மானத்திற்கு வந்தார் ஈ.வெ.ராமசாமி.

-------
(தொடரும்) *Download As PDF*

Saturday 1 August 2009

நான் எப்படி?


நான் ஒரு சுதந்திர மனிதன். எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.

(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)

*Download As PDF*

14. ஈ.வெ.ராவுக்கு வந்த மர்மக்கடிதம்..

கள்ளுக்கடை மறியலுக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆங்கில அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம். அதுவும் விடுதலை வேண்டி அல்ல. அவர்களின் ஆட்சி முறையில் இருக்கும் கோளாறுகளை குறைசொல்லி நடக்கும் போராட்டம். காங்கிரஸ் ஆதரவு அளித்து விட்டாலும் முழுப் பொறுப்பு ஈ.வெ.ராவின் வசம் ஒப்படைக்கப்பட்டது. போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. வழக்கமாக நடைபெறும் சுதந்திரப்போராட்டம் என்றால் பிரிட்டிஷ் அரசு அனுமதி கொடுத்திருக்கும். இது கள்ளுக்கடை மறியல். அவர்களைப் பொருத்தமட்டில் புதுவடிவத்தில் சுதந்திரப் போராட்டத்தை நடத்தப் போகிறார்கள் என்பதாக கருதி இருக்கலாம். அதனாலேயே 144 தடை உத்தரவை போட்டு, போராட்டத்தை தடுத்து நிறுத்திட நினைத்தது ஆங்கில அரசு. ஆனால்.. எதற்கும் அஞ்சாத ஈ.வெ.ரா தொண்டர்களை அணி திரட்டி போராட்டத்தை நடத்தினார். தடையை மீறி மறியல் நடத்தியதற்காக ஈ.வெ.ரா உட்பட பல்லாயிரக்கணக்காணோரை ஆங்கில அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

ஊருக்கு மட்டும் உபதேசம் செய்து வாழ்ந்தவர் அல்ல ஈ.வெ.ரா. தம் கொண்ட கொள்கையின்பால் தமது வீட்டினரையும் தயார் செய்து வைத்திருந்தார். பெரியாரின் இல்வாழ்க்கைத்துணை நாகம்மையாரும், பெரியாரின் தங்கை கண்ணம்மாளும் போராட்டத்திற்கு தலைமை ஏற்றனர். நாடு முழுவதும் பெண்களை ஒன்று திரட்டினர்.

பெண்கள் செய்யும் போராட்டம் தானே.. பெரிதாக என்ன செய்து விடப்போகிறார்கள் என்று அலட்சியம் காட்டிய பிரிட்டிஷ் அரசுக்கு அப்போது தெரியாது. மகளிர்சக்தி என்ன என்பது. மறியல் போரில் கலந்து கொள்ளும் பெண்களை கைது செய்ய போலீசார் காத்திருந்தனர். தெரு வாசலில் காத்துக்கிடந்த போலீசாரின் கண்ணில் மண்னைத் தூவி விட்டு பெண்கள் அனைவரும் தனித்தனியாக திரண்டனர். ஊருக்கு வெளியே இருக்கும் கள்ளுக்கடை அருகில் போய் ஒன்று சேர்ந்துகொண்டு கள்ளுக்கடைக்கு எதிரான கோஷங்களை போட்டபடி ஊர்வலம் போகத்தொடங்கினர்.

போலீசாருக்கு செய்தி பறந்தது. அவர்கள் கிளம்பி வருமுன் கள்ளுக்கடையை அடைந்துவிட்ட பெண்கள் கூட்டம் அக்கடையை அழிக்கும் பணியில் ஈடு பட்டது. கள்ளுப் பானைகள் விழுந்து நொறுங்கின. பெயர் பலகையும் அடித்து உடைக்கப்பட்டது. குடிசை பிரித்து எறியப்பட்டது. விற்பனை செய்துகொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சுனாமியாய் புறப்பட்ட பெண்கள் படைக்கு ஆவேசம் அடங்க வில்லை. அப்படியே அடுத்த கிராமங்களில் இருக்கும் கள்ளுக்கடையை நோக்கி நகர்ந்தனர். நாகம்மை, கண்ணம்மாள் உட்பட அத்தனை பெண்களிடத்தும் தனியாத கோபம் எரிந்துகொண்டிருந்தது. மேலும் சில கடைகளை அழித்த பிறகு, போலீசார் வந்து சேர்ந்தனர்.

நாகம்மையாரும், கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டனர். அவர்களுடம் ஆயிரக்கணக்கான பெண்களும் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் பத்திரிக்கை செய்தியாகியது. காங்கிரஸ் வரலாற்றில் முதலில் சமூகப் பிரச்சனைக்கான போராடி சிறை சென்றவர்கள் பெரியாரும், அவர்தம் குடும்பத்தினரும் தான் என்பதை வரலாறு பதிவு கொண்டது.

கள்ளுக்கடை மறியலால் பெண்களை பிரிட்டிஷ் அரசு கைது செய்துவிட்டது என்ற செய்தி காட்டுத்தீபோல வேகமாக பரவியது. நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன. ஆண்கள், பெண்கள் என்று தனித்தனியாக போராட்டங்களில் மூழ்கினர் மக்கள். ஆங்கில அரசு பயந்து போனது. ஈரோட்டில் போடப்பட்டிருந்த 144 தடை உத்தரவை நீக்கியது. மும்பையில்(பம்பாய்) ஒத்துழையாமை இயக்க செயல்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறு காந்தியடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது அரசு.

அதன் முதல் கோரிக்கையே என்ன தெரியுமா? கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை வாபஸ் வாங்கிக்கொள்ளுங்கள் என்பதாகவே இருந்தது. இதற்கென பண்டித மாள்விய, சங்கரன் நாயர் போன்றவர்களின் முயற்சியால் ஒரு தனி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநாட்டில் காந்தியடிகளிடம் இந்த மறியல் போராட்டத்தை நீங்கள் நிறுத்தச்சொல்லுங்கள் என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்.. இது தான், “மறியலை நிறுத்துவது என்பது என்கையில் இல்லை. அது ஈரோட்டில் இருக்கும் இரு பெண்கள் கையில் இருக்கிறது. நாகம்மை, கண்ணம்மாள் என்கிற அப்பெண்களைக் கண்டு உங்கள் கோரிக்கைகளை வையுங்கள்”

காந்தியடிகளின் இவ்வார்த்தை இந்திய நாடெங்கும் பரவியது. காந்தியடிகளே கைவிரித்து விட்ட காரியம், யாரோ இரு தமிழ்நாட்டுப்பெண்கள் கையில் தான் இருக்கிறதாம். அவர்களை நேரில் சந்திக்க தலைவர்கள் போகிறார்கள் என்ற செய்தி வேகமாக பரவியது. சில தலைவர்கள் ஈரோட்டுக்கு வந்து இறங்கினர். இவர்கள் வருவதற்கு முன்னமே சிறையில் இருந்த ஈ.வெ.ரா போன்றவர்கள் வெளியே விட்டு விட்டது அரசு. காங்கிரஸின் தலைவர்கள் நேரில் வந்து கேட்டதினால் போராட்டத்தை கைவிடுவதாக ஒப்புக்கொண்டார்கள்.. மகளிர்சக்தி கண்டு பித்துபிடித்து போய் இருந்தது ஆங்கிலேயே அரசு.

1922ம் வருடம் ஈரோட்டில் வந்த பண்டித மோதிலால் நேரு, வித்தல்பாய் படேல், டாக்டர் அன்சாரி போன்ற பெருந்தலைவர்கள் ரயில் நிலையத்தின் அருகில் இருக்கும் தம் இல்லத்தில் தங்கியதின் நினைவாக அவ்வில்லத்தை இந்தி கற்பிக்கும் பாடசாலை ஒன்றை திறந்தார் ஈ.வெ.ரா. முப்பது மாணவர்கள் படிக்கும் வசதி கொண்ட அப்பள்ளியில் பதினைந்து மாணவர்களுக்கான தங்கும், செலவு, உணவு, உடை மற்றும் கல்வி ஆகிய எல்லா செலவுகளையும் தாமே ஏற்றுக்கொண்டார். ஏனோ அப்பள்ளி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நடந்தது.

நாட்டில் நிலவும் தீண்டாமையை ஒழிப்பு பிரச்சாரத்திலும் போராட்டத்திலும் காங்கிரசாரை இறங்கச்சொன்னார் காந்தியடிகள். காந்தியடிகளின் உத்தரவை ஏற்று முழுமூச்சாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ராமசாமி. போராட்டத்தில் ஒரு கட்டமாக தாழ்த்தப்பட்டோர் என்று ஒதுக்கப்பட்ட மக்களுடன் கோவிலுகுள் நுழையும் ஆலயப்பிரவேசம் என்ற போராட்டம் அது. இந்த ஆலயப்பிரவேசம் என்ற போராட்டத்திலும் முதல் வெற்றியை பெற்றவர் ஈ.வெ.ரா தான்.

குளித்தலையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொண்டு, அங்கிருந்தவாரே மதுரை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் தீட்டாமை ஒழிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார் ராமசாமி. அந்த பயணம் அதிக நாள் நீடிக்க வில்லை. தீராத வயிற்று நோய் (அல்சர்) அவரை பாடாகப் படுத்தியது. சுற்றுப்பயணத்தை பாதியிலேயே விட்டு விட்டு, எங்கெல்லாம் போய் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற விபரங்களை மற்றவர்களிடம் சொல்லி பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு ஈரோட்டுக்கு திரும்பினார்.

சாப்பாடு நேரம் தவறி சாபிடுவதும், அதிக காரமான உணவும் தான் இப்படியான நோய்கள் வரக்காரணம் என்று சொல்லப்பட்டதால் கண்டிப்புடன் ராமசாமியை கட்டாய ஓய்வில் இருக்கச்சொல்லி விட்டார்கள். படுக்கையிலேயே நாட்கள் கழிந்தன.. அப்போது வீட்டில் யாரும் தெரியாமல் ஒரு ரகசியக் கடிதம் ஈ.வெ.ராவின் கைகளின் கிடைக்கும் வண்ணம் அனுப்பப்பட்டு வந்து சேர்ந்தது.

அந்த கடிதத்தை படித்த ராமசாமி தமக்கு குணமாகி விட்டதாகவும், தாம் ஒரு வேலையாக வெளியூர் செல்லவேண்டும் என்றும் பொய் சொல்லி, பெட்டியில் துணிமணிகளை அடுக்கி வைத்துக்கொண்டு, வயிற்று நோயுடனே கிளம்பிப் போனார். கணவர் செல்வதை வாசலில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் நாகம்மை.

அந்த மர்மக்கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது? அதைப் படித்ததும் அவசரம் அவசரமாக எங்கே கிளம்பிப் போகிறார்.. ஈ.வெ.ராமசாமி....?

(தொடரும்) *Download As PDF*